வைதீக வள்ளுவர்


வைதீக வள்ளுவர்
திருக்குறளின் பெருமையை விவரிக்க வந்த நூல் திருவள்ளுவ மாலை ஆகும்! இதில் பாரதம் பாடிய பெருந்தேவனார், பரணர்,நல்கூர்வேள்வியார்,
பொன்முடியார், கபிலர் உள்ளிட்ட புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்துள்ளனர்! இறையனார் சிவபெருமானும், ஸரஸ்வதி தேவியும் வாழ்த்துவதாக அமைந்துள்ளது! வள்ளுவம் வைதீக நூல் என்பதற்கு இதுவே போதுமான் சாட்சியாக உள்ளது! புலவர்களது பாடல்கள் கருத்து வடிவில்...



🙏 திருமால் சிறிய வாமனராகத் தோன்றி த்ரிவிக்ரமனாக வளர்ந்து தம் இரண்டு அடிகளால் உலகளந்தார் அதேபோல் வள்ளுவர் தம் இரண்டடி குறட்பாக்களால் உலகளந்தார்!

🙏 திருமாலின் புத்ரனும் வேதங்களைக் கொண்டு படைப்பவனுமான ப்ரம்மதேவரே திருவள்ளுவராகத் தோன்றி திருக்குறள் அருளினார்!

🙏 திருமகளது சிறப்பு திருமாலை அடைவது போல் வெண்பாக்களின் சிறப்பு திருக்குறளாகும்! திருக்குறளைக் கற்காதவரிடத்தே திருமகள் விரும்பி அருள் செய்யமாட்டாள்!

🙏 ஏழுகாளைகளை அடக்கி நப்பின்னை பிராட்டியை மணந்த கண்ணன் வடமதுராவுக்கு அச்சாவது போல் தென்மதுரைக்கு வள்ளுவர் அச்சாவார்! அதாவது கண்ணன் கீதையின் சாரத்தை வள்ளுவர் பாடினார் என்று மறைமுகமாகப் புலவர் கூறுகிறார்!

🙏 ராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட நூல்களின் சாரத்தைக் கூறுவதில் இணையற்றது வள்ளுவர் குறளாகும்!

விளக்கமாக பாடலுடன்

பொன்முடியார் பாடல் -

கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின் றளந்த குறளென்ப--நுன்முறையான்
வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார்
தாநின் றளந்த குறள்.

விளக்கவுரை :

மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் அதாவது காஷ்யப முனிவரது மகனாகத் தோன்றிய வாமன அவதாரப் பெருமாள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது, இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தையளந்தது.

நல்கூர்வேள்வியார் பாடல்

உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா
னுத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்க
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு

விளக்கவுரை :
நக்னஜிதி எனும் நப்பின்னை பிராட்டியை ஏழு காளைகளை அடக்கி மணந்த கண்ணனை வட மதுரைக்குக் நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.


பரணர் பாடல்

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுது நயந்தளந்தான் -வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
ருள்ளுவ்வெல் லாமளந்தா ரோர்ந்து.

விளக்கவுரை :

திருமால் குறளாய்த் தோன்றித்தன் (வாமன அவதாரம்) இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்!


காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடல்

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.

விளக்கவுரை :

திருமாலது புத்திரனான நான்முகனே திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.


பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடல்

எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.

விளக்கவுரை :

எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்!


கவிசாகரப் பெருந்தேவனார் பாடல்

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத
மாவிற் கருமுனியா யானைக்- கமரரும்பல்
தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

விளக்கவுரை :

பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிக்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.



வைதீக வள்ளுவர்

திருவள்ளுவர் தனது திருக்குறளில் 'அடியளந்தான்' , 'தாமரைக் கண்ணான்' போன்ற சொற்களால் திருமாலைக் குறிப்பிடுகிறார்! திருமால் தனது அடியால் மூவுலகும் அளந்த செய்தி திருக்குறளுக்கு முற்பட்ட பல்வேறு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது!

செய்யாள், தாமரையினாள், திரு முதலிய சொற்களால் திருமாலின் பத்னியான மஹாலக்ஷ்மித் தாயாரைக் குறிப்பிடுகிறார்! திருமகளே திருக்குறளில் அதிகமான முறை குறிப்பிடப்படும் தெய்வம் ஆவாள்! மாமுகடி என்று ஜேஷ்டாதேவியைக் குறிக்கிறார்!

உலகியற்றியான் என்று படைப்புக் கடவுளான ப்ரம்மதேவரைக் குறிப்பிடும் வள்ளுவர் நேரடியாகவே இந்திரன் எனும் சொல்லால் தேவர்களின் தலைவனைக் குறிப்பிடுகிறார்! கூற்றம் எனும் சொல்லால் மரண தேவனான யமனைக் குறிக்கிறார்!

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்