சங்கத்தமிழும் சங்கதமும்!

சங்கத்தமிழில் சங்கதத் தாக்கம்


பொதுவாகவே உலகில் எந்த மொழியும் பிறமொழி கலப்பின்றி இருப்பதில்லை. அந்த வகையில் தமிழில் இன்றைய தேதிக்குப் பல மொழிச் சொற்களும் கலந்து உள்ளன. அவற்றுள் சங்கதம் எனப்படுகின்ற சம்ஸ்கிருத மொழியின் சொற்கள் அன்றாடப் பயன்பாட்டில் இன்றும் அதிகமாகவே இருக்கின்றன. தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பின்னர் பெருவாரியான சம்ஸ்கிருத சொற்கள் நம்முடைய பயன்பாட்டில் இருந்து அகன்று போயின. அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் புழக்கித்திற்கு வந்தன. 

வரலாற்றில் ஒரு மொழியின் சொற்கள் மற்ற மொழிகளில் கலப்பது பற்றி அறிந்து கொள்வதென்பது இன்றியமையாத ஒன்றாகிறது. அறிஞர் திரு. வையாபுரி பிள்ளை அவர்கள் ‘கழகம்’ என்ற சொல் வடமொழி மூலத்தை உடையது என்று ஒரு தனி கட்டுரையே எழுதி இருக்கிறார் என்றால் இதன் முக்கியத்துவத்தை உணரலாம். ஒருவகையில் இந்த கலப்பென்பது ஒரு முதிர்ந்த நாகரிகத்தின் அடையாளமாகக் கூட சொல்லலாம். பட்டினப்பாலையில் காவேரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு மொழி பேசிய வணிக மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கிடைக்கிறது. வாணிபம், படையெடுப்பு, சமயப் பரவல் ஆகிய காரணங்களால் பிறமொழிச் சொற்கள் ஒரு மொழியில் கலப்பது இயல்பான விஷயம்தான்.

ஒப்பீட்டு அளவில் மற்ற தமிழ் இலக்கியங்களைக் காட்டிலும் சங்கத் தமிழ் இலக்கியங்களில் சங்கதக் கலப்பு மிக மிகக் குறைவு தான். என்றாலும் கூட, அவை முற்றிலும் கலப்பற்றவை என்று குறிப்பிட இயலாது. சில கிரேக்க சொற்கள் கூட சங்க இலக்கியங்களில் இருப்பதாக அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் உதாரணம் மத்திகை, சுருங்கை. சங்க இலக்கியங்களில் இருக்கக்கூடிய சங்கதச் சொற்கள் பெரும்பாலும் சமயத் தொடர்பானவை தான். இது வைதீக மதத்தின் பரவல் சங்ககாலத்திலேயே தமிழகத்தின் தொடங்கி விட்டது என்பதைக் காட்டுகின்றது. தொல்காப்பியர் வட சொற்களை எவ்வாறு தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இலக்கண விதியை நிர்ணயித்துள்ளார் எனும் போது எந்த அளவிற்கு சங்கதச்சொற்கள் தமிழில் புழங்கி இருக்க வேண்டும் என்பதை நம் உணர்ந்து கொள்ளலாம். 


பத்துப்பாட்டில் சங்கதச் சொற்கள்

சிறந்த தமிழறிஞரான இராசமாணிக்கனார் அவர்கள் பத்துப்பாட்டை ஆய்வு செய்து எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்கின்ற தன்னுடைய நூலில் சங்க இலக்கியங்களில் இருக்கின்ற சங்கத சொற்களைப் பட்டியலிடுகிறார் இவற்றில் நாம் தமிழ் என்று நினைக்கும் சில சொற்களும் கூட சங்கத மூலத்தை உடையவை என்று கூறுகிறார். அந்தப் பட்டியல் இதோ. தேசம், ஆரம், குமரி, நிதியம், அமிர்தம், நேமி, உலகம், எந்திரம், மண்டலம், பார்ப்பனர், மிலேச்சர், யவனர், யூபம், நியமம், அந்தி, வேதம், உவமம், ஓணம், ரோகிணி, மோதகம் ஆகியவை. 

இது தவிர சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்களின் சில பெயர்களிலும் கூட வடமொழித் தாக்கம் காணப்படுகிறது.  குறிப்பாக பிராமணப் புலவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களில் அவர்களின் கோத்திரப் பெயர் சங்கத மொழியில் தான் அமைந்துள்ளன. உதாரணம் இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், கடம்பனூர்ச் சாண்டில்யன், செல்லூர்க்கோசிகன் கண்ணனார், தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், கள்ளில் ஆத்திரையனார், காசிபன் கீரன், பாலைக் கௌதமனார், பெருங்கௌசிகனார், மதுரை இனங்கௌசிகனார். இவற்றில் கௌசிக, ஆத்ரேய, காஷ்யப, கௌதம ஆகியவை வடமொழியில் அமைந்த கோத்திரப் பெயர்கள்.


சில புலவர்களின் பெயர்கள் புராணப் பின்னணியை உடையவை. கேசவனார் (கேசிகன் எனும் குதிரையைக் கொன்றதால் வந்த பெயர்), தாமோதரனார் (வயிற்றில் யசோதை கட்டிய கயிற்றின் தழுப்பினால் ஏற்பட்டது), கோவர்த்தனர் (கோவர்தன மலையைத் தூக்கியதால் வந்த பெயர்) என்பவை கண்ணனின் பெயர்கள். இந்தப் பெயர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் புராணங்கள் பரவிவிட்டதைச் சொல்பவையாக உள்ளன. 


இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் வாணியல், ஜோதிடத்துடன் தொடர்புடைய ராசி, நட்சத்திர, மாதப் பெயர்கள் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை, அவை தமிழில் திரிந்து வழங்கி வருகின்றன. உதாரணமாக தை, பங்குனி உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் வரும் மாதப் பெயர்கள் திஷ்யம் (பூசம்), பல்குனம் ஆகிய வடமொழிப் பெயர்களில் இருந்து தோன்றியவை. 


சங்க இலக்கியங்களில் சில இடங்களில் நட்சத்திரப் பெயர்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன. உதாரணம் உரோகிணி –- நெடுநல்வாடை (சில இடங்களில் ரோகிணியின் குறியீடு சக்கரம் என்பதால் சகடம் -என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது). சில இடங்களில் தமிழில் வழங்கப்படுகின்றன. உதாரணம் அனுஷம் என்ற பெயர் அதன் வடிவத்தை முன்னிட்டு ‘முடப்பனை’ எனும் சொல்லால் வழங்கப்படுகிறது.   


  அறிஞர்களிடையே விவாதம்

ஓரை என்ற சொல் தொல்காப்பியத்தில் வருகிறது. இச்சொல் கிரேக்க மொழியில் இருந்து சங்கதம் வந்து பின்பு தமிழ் மொழியை அடைந்திருக்க வேண்டும் என்று தன் கருத்தை முன் வைத்தார் வையாபுரி பிள்ளை அவர்கள். தொல்காப்பியத்தின் காலத்தை நிர்ணயிக்க இதனையும் ஓர் ஆதாரமாக அவர் கொண்டார். இதை மறுத்து இச்சொல் கிரேக்கத்திலிருந்து நேரடியாக தமிழுக்கு வாணிபத்தின் மூலமாக வந்தது என்று நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள். கடந்த காலத்தில் ஒரு சொல்லின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இவ்வளவு தூரம் விவாதங்கள் நடந்து இருக்கின்றன என்பதை அறியும்போது சொல்பிறப்பியல் ஆய்வு என்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். 


 அதேபோல சங்க இலக்கியத்திற்கு சமகாலத்தவை என்று அறியப்படுகின்ற பழந்தமிழ் பிராமி கல்வெட்டுகள், பானை ஓட்டுப் பொறிப்புகள் பெரிய அளவில் சங்ககத் தொடர்பைப் பெற்றவையாகத் தெரியவில்லை. சங்ககத் தொடர்புள்ள சிலவற்றை அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பட்டியலிட்டுள்ளார். சமண சமயத் தொடர்பு மிக்கவையான கல்வெட்டுகள், பானை ஓட்டுப் பொறிப்புகளில் பிராகிருத சொற்களே காணப்படுகின்றன. பானை ஓடுகளில் கிடைக்கின்ற பெயர்கள் 50 சதவீதம் பிராகிருதம் மொழியைச் சார்ந்தவை என்று அறிஞர் சுப்பராயலு அவர்கள் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியப் புலவர்களின் பெயர்களில் மிக அதிகமான முறை பயன்படுத்தப்படுகின்ற பெயர் என்று பார்த்தால் அது கண்ணன் என்கின்ற பெயர்தான். இது பிராகிருத மொழி ‘கண்ஹ’ என்பதிலிருந்து வந்துள்ளதாக சிலர் கூறுவதுண்டு. புறநானூற்றில் அவ்வையார் எழுதிய ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்கின்ற பாடல் பாலி மொழியில் அமைந்த தம்மம்பபுத பாடலின் தமிழாக்கம் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுவர். 


சமகாலத்தவையான சங்க இலக்கியங்கள், பானை ஓட்டுப் பொறிப்புகள் ஆகியவற்றுக்கு இடை இந்த வேறுபாடு இருப்பது ஏன் என்பது ஆய்வுக்கு உட்பட்டது.

++++++++++++++++++++++++++++++++

1)  ஸம்ஸ்க்ருதத்தின் பழமையைச் சொல்லும் சங்கத்தமிழ்! 

சங்கப்புலவர்களின் பெயர்கள் சில

1) கோவர்த்தனர் 

2) கேசவனார்

3) தாமோதரனார் 

இந்தப் பெயர்கள் வடமொழியில் உள்ளவை. இவற்றின் பொருளை அறிய இந்து சமய ஸம்ஸ்க்ருத புராணங்களைத் தான் தேட வேண்டும். 

1) கோவர்தன கிரியைத் தூக்கியதால் கண்ணன் பெற்ற பெயர்.   

2) கேசிகன் எனும் குதிரை வட அசுரனைக் கொன்றதால் கண்ணன் பெற்ற பெயர். (கூந்தல் குதிரை என்று இதை கலித்தொகை கூறும்).

3) தாம + உதரம் ... யசோதை கயிற்றால் கட்டியதால் கண்ணன் வயிற்றில் தழும்புண்டானது ... அதைக் குறிக்கும் பெயர்.

கிருஷ்ணரின் வடமொழிப் பெயர்களைத் சங்கத் தமிழ்ப் புலவர் தம் பெயர்களாகக் கொண்டுள்ளனர். 

இதிலிருந்து தமிழில் சங்க இலக்கியம் தோன்றும் முன்பே இந்து மதமும், கூடவே வடமொழியும் தமிழகம் வந்துவிட்டன என்று தெரிகிறது. இந்தப் பெயர்களுக்கான விளக்கங்கள் ஸம்ஸ்க்ருத புராணங்களில் தான் உள்ளன. எனவே அப்புராணங்கள்  சங்க காலத்திலேயே வாய்மொழியாகவோ அல்லது எழுதப்பட்டோ தமிழகம் வந்தடைந்துவிட்டன என்பதை உணரலாம். வடமொழியின் பழமைக்குச் சிறந்த சான்றாக சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன.


2) பழந்தமிழ் நூல்களில் மேலும் சில சம்ஸ்கிருத சொற்கள்

யவனம் (புறநானூறு, 56 : 18)

யூபம் (புறநானூறு, 15 : 21)

அரமியம் (அகநானூறு, 122 : 5)

ஆதி (குறுந்தொகை, 293 : 4), (திருக்குறள், 1)

யாமம் (குறுந்தொகை, 6 : 1)

உரோகிணி (நெடுநல்வாடை, 163)

சாலேகம் (நெடுநல்வாடை, 125)

நேமி (கலித்தொகை, 105 : 9)

ஆரம் (கலித்தொகை, 79 : 12)

காரணம் (கலித்தொகை, 60 : 12)

கமலம் (பரிபாடல், 2 : 14)

போகம் (பரிபாடல், 5 : 79)

மிதுனம் (பரிபாடல், 11 : 6)

அவுணர் (திருமுருகாற்றுப்படை, 59)

அங்குசம் (திருமுருகாற்றுப்படை, 110)

பாக்கியம் (திருக்குறள், 1141)


3) மாபாரதம் தமிழ்படுத்த சங்கம் வைத்த பாண்டியர்

பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்ற வரலாற்றை நாம் அறிந்திருப்போம்.‌

சங்கங்கள் இருந்தன என்பதற்கு இலக்கியங்கள் தாண்டிய வலுவான வரலாற்று சான்று என்று சொன்னால் அது சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு ஆகும். இது 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

இச்செப்பேட்டில் 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்' என்று பாண்டியர் புகழ் பாடப்படுகிறது. அதாவது பாண்டியர்கள் மதுராபுரி (மதுரையில்) சங்கம் வைத்ததே மகாபாரதத்தை ஸம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கவே என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட மகாபாரதம் எதுவென்று தெரியவில்லை. அது தொலைந்திருக்கலாம். ஆனால் சங்க இலக்கியத்தில் காணப்படும் மகாபாரத கதைக் குறிப்புகளும், சங்க நூல்களின் கடவுள் வாழ்த்து பாடியவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற குறிப்பும் சங்க காலத்திலேயே மகாபாரத தமிழ் மொழிபெயர்ப்பு இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.





சிறந்த தமிழ் அறிஞரும், பேராசிரியருமான திரு. வையாபுரி பிள்ளை அவர்கள் பஞ்சதந்திர  மொழிபெயர்ப்பு என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 

பஞ்சதந்திர கதைகள் என்பது வட இந்தியாவில் விஷ்ணு சர்மா என்பவரால் எழுதப்பட்டதாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்து இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 

பாரசீக நாட்டு மன்னன் இந்த நூலின் புகழைக் கேட்டு  தன்னுடைய ஆஸ்தான வைத்தியரை அனுப்பி பஞ்சதந்திரக் கதையைப் பாரசீக நாட்டிற்குக் கொண்டு வந்தார்.  அங்கு பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இவர்களிடமிருந்து அரேபியர்கள் தங்களுடைய மொழியில் பஞ்சதந்திர கதைகளை மொழி பெயர்த்துக் கொண்டார்கள்.

கி.பி. 12 - 13ஆம் நூற்றாண்டுகளில் ஹீப்ரூ, லத்தின், கிரேக்கம் முதலிய மொழிகளில் பஞ்சதந்திரக் கதை மொழிபெயர்க்கப்பட்டது. பின்னால் ஆங்கிலம் பிரெஞ்சு முதலிய மொழிகளிலும்  மொழிபெயர்க்கப்பட்டது. இப்பேற்பட்ட சிறப்புடைய இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டிய அவசியத்தையும், முறையையும் திரு. வையாபுரி பிள்ளை அவர்கள் கூறுகிறார்.

இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் கூட  சிலப்பதிகார காலத்தில் பஞ்சதந்திர கதைகள் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் வருகின்ற 'கீரிப்பிள்ளையும் பிராமணியும்' என்பது என்ற கதை உண்மையில் பஞ்சதந்திர கதையே ஆகும். அதுபோல பஞ்சதந்திரக் கதைகளில் வருகின்ற ஸ்லோகத்தின் நேரடி மொழிபெயர்ப்பாக ஒரு நாலடியார் பாடல் உள்ளதைப் பேராசிரியர் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். கட்டுரையின் பக்கங்கள் கமெண்டில்! 

இதிலிருந்து வடமொழியில் அமைந்துள்ள பஞ்சதந்திர கதையின் பெருமைகளையும், அதை இயற்றியவரின் மேதைமையும் உணர்ந்து கொள்ளலாம்.‌ 





திருக்குறளின் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு. மனுஸ்ம்ருத்தியின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு.
மனு உள்ளிட்ட வடநூல்களின் தாக்கம் திருக்குறளில் உள்ளது. சில குறள்கள் மனுவின் சில சுலோகங்களின் மொழிபெயர்ப்பாகவே உள்ளது.
- பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை
மனுநீதி விளங்க சோழனும், பாண்டிய அரசரும் ஆட்சி செய்தனர் என்று அவர்களின் மெய்க்கீர்த்தி கூறும்.






தமிழக பானை ஓடுகளில் பிராகிருத பெயர்களைப் பற்றிய கீழ்காணும் கருத்து 
திரு. சுப்பராயலு அவர்களால் 2008ஆம் ஆண்டு, ஜூலை மாத ஆவண இதழில் வெளிவந்தது. 
தமிழக அகழாய்வுகளில் (அப்போது கீழடி கண்டுபிடிக்கப்படவில்லை‌. ஆகவே அது நீங்கலாக)
கிடைத்த பானை ஓட்டுப் பெயர்களில் 50% பிராகிருத பெயர்கள் தான். பிராகிருதம் பேசிய வணிகர்கள் மூலம் தமிழகத்திற்கு பிராமி எழுத்து வந்துள்ளது!









குவீரன் சர்ச்சை 



எந்தக் குலம் வெண்ணிலவைப் போல் சுத்தமாகவும், உலகை மகிழ்வித்துக் கொண்டும் தோன்றியதோ....
எந்த ஆய்குலம் தோன்றியதால் சந்திரனின் கலங்கம் நீங்கியதோ... எந்தக் குலத்தோரின் சேனையில் உள்ள யானைகளின் தந்தங்களாகிய உளிகளால் ஹஸ்தாசலம், ஹிமாசலம், மலயம் என்னும் மலைகளின் சாரல்கள் செதுக்கப்பட்டு வெற்றித்தூண்கள் போல் அமைக்கப்பட்டனவோ...
கடல்களாகிய பணிப்பெண்கள் அலைகளாகிய தங்கள் மொட்டு போன்ற கைகளால் நுரைகளாகிய சாமரங்களை வீசும் பேற்றை எந்த குலம் பெற்றதோ...
எந்தக் குலத்தினருடைய முடிசூடுகின்ற தலைகள் மேல் விளங்கும் வெண்கொற்றக்குடை திருமகள் தன் கையிலுள்ள தாமரை மலரை நாளத்தோடு பிடித்துச் சுற்றுவது போல் அழகாக சுழல்கின்றதோ...
அத்தகைய யாதவ குலமானது மற்ற அரசர்களுக்குத் தலைமையாக,  சந்திரன் நக்ஷத்ரங்களுக்குத் தலைமையாக விளங்கும் வரை நீடித்திருக்கும்! 
- பாலியத்துச் சாசனம் (சம்ஸ்க்ருத பகுதியின் மொழிபெயர்ப்பு)
ஆய்குலமன்னர் செப்பேடு 
காலம் பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு!  
இச்செய்யுள் ஆய்குல மன்னர்களின் வ்ருஷ்ணி / யாதவ குலத்தின் சிறப்பை கவிநயத்தோடு வர்ணிக்கின்றது!
ஆய் குல மன்னர் என்போர் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளை ஆண்டுள்ளனர்! 
இச்செப்பேடு பார்த்திபசேகரபுரம் என்ற ஊரில் உள்ள திருமால் கோவிலுக்கும், 95 பிராமணர்களுக்கும் தரப்பட்ட தானத்தைப் பற்றி கூறுகின்றது! 



வேள்விக்குடிச் சாசனத்தை வெளியிட்ட அரசன் பராந்தக நெடுஞ்சடையன் ஆவான்.‌ முற்காலத்தில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன் பிராமணர் ஒருவருக்கு நிலம் தந்திருந்தான். இது அபகரிப்பட்டு விட்டதாலேயே அவர் வழிவந்தவர் அந்த பிரம்மதேயத்தை மீட்டுத் தரச் சொன்னார்‌. இதை மீட்டுத் தந்ததற்கான ஆதாரமே இச்செப்பேடாகும்.
இதில் தமிழ்ப் பகுதியில் குறிபிடப்படும் மன்னரின் விருதுப் பெயர்கள் பின்வருமாறு.‌
சிரீவரன், சிரீமனோகரன், சினச்சோழன், புனப்பூழியன், வீதகன்மஷன்,
விநயவிச்சுருதன், விக்ரம பாரகன், வீர புரோகன், மருத்பலன் மான்ய
சாசனன், மனூபமன், மர்த்திதவீரன், கிரிஸ்திரன், கீதிகிந்நரன், கிருபால
யன், கிருதாபதானன், கலிப்பகை கண்டக நிஷ்டுரன்,
வத்சலன்,
கார்முகப்பார்த்தன்,
பராந்தகன், பண்டித
கார்யதக்ஷிணன்,
பரிபூர்ணன்,
பாபபீரு, கடற்படைத்தானை குணக்கிருகியன்,
கூடநிர்ணயன், நேரியர்கோன், நெடுஞ்சடையன் என்னும் பெயர்களை உடையவன்.
வடமொழி விற்பன்னர்கள் யாரேனும் இவற்றுக்கான விளக்கம் தந்தால் மகிழ்ச்சி. 
ஆதார நூல் - பாண்டியர் செப்பேடு பத்து


சோழர்களின் காலத்தில் திருமால் கோவில்களில் அன்றைய மருத்துவமனைகளான ஆதூல சாலைகள் செயல்பட்டு வந்தன.  ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டி தன் தந்தையான சுந்தர சோழனின் பெயரில் சுந்தர சோழ விண்ணகர ஆதுர சாலையை நிர்மாணித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.  
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டு ஆதூரசாலையில் எத்தனை மருத்துவர்கள், எத்தனை செவிலியர்கள், என்னென்ன மருந்துகள் இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. இந்த மருந்துகள் அனைத்தும் ஆயுர்வேத மருந்துகள் ஆகும். மருந்துகளின் பெயரும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது‌. 
இப்பெயர்கள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இந்தியா முழுக்கவே வழக்கத்தில் இருந்த மருத்துவமான ஆயுர்வேதம் தான் தமிழகத்திலும் இருந்துள்ளது என்பதற்கு இது முக்கியமான ஆதாரமாக கருதலாம். சித்த மருத்துவத்திற்கு இது போன்ற ஆவணங்கள் உள்ளனவா என்று ஆராய வேண்டும்.
சோழர் கால ஆதுர சாலைகளில் சல்லியக்ரியை எனப்படும் அறுவை சிகிச்சையும் கூட செய்யப்பட்டிருந்தது. அநேகமாக பெருமாள் கோவில்களில் உள்ள தன்வந்திரி சன்னதி ஒட்டி ஆயுர்வேத மருத்துவமனைகள் இருந்திருக்கக் கூடும்‌.
தகவல் படம் - திரு. குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களின் தஞ்சாவூர் நூல்.









மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது யானைமலை.‌ இதற்கு இப்பெயர் எப்போதிலிருந்து உள்ளது? 1800 ஆண்டுகளுக்கு முன்பிருந்து...
ஆதாரம் 
யானை மலையிலேயே அமைந்துள்ள பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டு.  
கல்வெட்டு வாசகம் 
"இவ குன்றத்து உறையுள் பா தந்தான் எரி
அரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்"
பொருள் 
இவ குன்றத்துச் சமணர் படுக்கையைச் செய்து கொடுத்தது எரி என்ற இடத்தைச் சேர்ந்த மதிப்புறு அரிதன் மற்றும் விளக்கவாளர் அரட்ட காயிபன் என்பவர் ஆவார். 
இதில் 'இபம்’ என்னும் வடமொழிச் சொல் யானையைக் குறிக்கும். இபமாகி என்று திருப்புகழில் வருவதைக் கூறலாம். ஆதலின் ‘இபக்குன்றம்’ என்பது ‘யானைக்குன்றம்’ என்பதே. இதிலிருந்து இம்மலை தொன்றுதொட்டே யானைமலை என்று அழைக்கப்பட்டது தெளிவு.
1800 ஆண்டுகளுக்கு முன்பே வடமொழி சொல் தமிழ்க்  கல்வெட்டில் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க தகவலாகும்.
கல்வெட்டு தகவல் 
Tamil virtual University 








சங்க இலக்கியங்களைப் பற்றி படிக்கின்ற யாவரும் நிச்சயமாக இந்த புத்தகத்தை அறியாமல் இருக்க மாட்டார்கள். இராசமாணிக்கனார் அவர்களின் பத்துப்பாட்டு ஆராய்ச்சி சங்க இலக்கியங்களைப் பற்றி மிக முக்கியமான வரலாற்று ஆய்வு நூல் ஆகும்.
இதில் பத்துப்பாட்டில் பிறமொழிச் சொற்கள் என்ற பகுதியில் அவர் குறிப்பிடுகின்ற முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். சமணர்கள் மூலமாக தமிழகத்தில் அர்த்தமாகதி பாஷையும், பௌத்தர்கள் மூலமாக பாலி மொழியும் தமிழில் கலந்துள்ளன என்றாலும் கூட இவர்கள் இருவரை விடவும் வேதியர்கள் அதாவது பிராமணர்கள் தமிழகத்தில் நீண்ட காலம் இருப்பதால் அவர்கள் மூலமாக சமஸ்கிருத சொற்கள் அதிகமாக தமிழில் புகுந்துள்ளனர் என்ற உண்மையை கூறுகிறார்.
தேசம், ஆரம்,  குமரி, நிதியம்,  அமிர்தம், நேமி, உலகம், எந்திரம், மண்டலம், பார்ப்பனர், மிலேச்சர், யவனர், யூபம், நியமம், அந்தி, வேதம், உவமம், ஓணம், ரோகிணி, மோதகம் ஆகியவை வடமொழிச் சொற்கள் என்கிறார். 











வடமொழியைப் புறக்கணித்ததால் வடமொழியில் உள்ள வான் சாஸ்திரத்தை அறிய முடியாமல் போயிற்று. ஜெர்மன்காரர்கள் வடமொழிக்கென்றே 150 ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கூடம் வைத்துள்ளனர். வடமொழியில் உள்ள வான் சாஸ்திரத்தைப் படித்து பல நூல்கள் இயற்றியுள்ளார்கள். அந்த நூல்களையும், வடமொழியில் உள்ள வான சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு சுவாமிக் கண்ணுப்பிள்ளை Indian ephemeris என்று ஏழு தொகுதிகளை வெளியிட்டார்.

இந்நூல்களே (தமிழக அரசர்களின்) காலக்கணக்கீட்டிற்கு இன்று பெரிதும் உதவுகின்றன. வடமொழியைப் புறக்கணித்ததால் வான் சாஸ்திரத்தை அறிய முடியாது.

அன்றைய மன்னர்கள் வான சாஸ்திரத்தை அறிந்த வல்லுநர்களை ஆதரித்தால் அதன் பயனை இன்று நாம் அடைகிறோம். வடமொழியைப் புறக்கணித்ததால் (இன்று) தமிழனுக்கு வானசாஸ்திரம் புரியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

- பாண்டியர் வரலாறு
என். சேதுராமன்





இராஜராஜச் சோழரின்  ஸ்ரீரங்கப்பட்டினம் கல்வெட்டு. இக்கல்வெட்டில் "பரிதாபி" என்னும் தமிழ் (சமஸ்கிருத) வருடம் குறிக்கப்பட்டுள்ளது.
( Epi.carnatica vol 3 no 140)
இராஜராஜனின் ஹோட்டூர் கல்வெட்டு.
காலம் கி.பி.1007.
இக்கல்வெட்டில் 
" பிலவங்க " என்னும் தமிழ் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
( Epi.indica vol 16 p.74)
(கல்வெட்டு தகவல்கள் நன்றி திரு. மாரிராஜன் ஐயா) 
இப்படி தமிழர்களின் பெருமை என போற்றப்படும் நம் ராஜராஜ சோழனே சமஸ்கிருத பெயரில் உள்ள தமிழ் வருடங்களைப் பயன்படுத்தியுள்ளார்! ஆனால் திருவள்ளுவர் ஆண்டு கணக்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! கி.மு.31 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பிறந்ததாகச் சொல்லும் ஆவணங்கள் யாரேனும் தந்தால் இக்கருத்தை மாற்றிக் கொள்ளலாம்! (அல்லது திருவள்ளுர் ஆண்டுக் கணக்கு எங்கள் நம்பிக்கை மட்டுமே என்று கூறிவிட்டால் அதில் யாரும் தலையிட இயலாது... இதை வரலாறு என்று சொல்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்!)





கருநந்தடக்கன் எனும் ஆய்குல மன்னரின் பார்த்திவசேகரபுரம் செப்பேட்டில் அந்த செப்பேடு வழங்கப்பட்ட நாள் என்பது கலியுகம் தொடங்கி 14,49,087 ஆவது நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது! 
தமிழகத்தில் கலியாண்டு கணக்கு முறையின் பழமைக்கு இந்த செப்பேடே சான்று! கண்ணபிரான் தன் அவதார நோக்கம் நிறைவுற்று வைகுந்தம் திரும்பிய நாளிலிருந்து கலி தொடங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது! இந்த இந்து சமய நம்பிக்கையான கலியாண்டையே ஆய்குல மன்னர் பயன்படுத்தியுள்ளார்!
புத்தகம் source - பாண்டியர் செப்பேடுகள் பத்து 
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு




1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" (நற்றிணை)
2. "தைஇத் திங்கள் தண்கயம் போல்"" (புறநானூறு)
3. "தைஇத் திங்கள் தண்கயம் போல"(ஐங்குறுநூறு)
இவற்றின் பொருள் தை திங்கள் (மாதம்) கயம் (குளம்) தண்மையாக (குளிர்ச்சியாக) இருக்கும்! 
இதில் எந்த இடத்தில் 'தை புத்தாண்டு' என்று கூறப்பட்டுள்ளது? 





தமிழ் மாதப் பெயர்கள் தமிழல்ல, ஸம்ஸ்க்ருத மூலத்தை உடையவை. 
தமிழ் மாதப் பெயர்கள் எவ்வாறு தோன்றின? 
ஒவ்வொரு மாதத்தில் ஒரு பௌர்ணமி வரும்... அது எந்த நக்ஷத்ரத்தன்று வருகிறதோ அந்த நக்ஷத்ர பெயரே மாதப் பெயராகும்! இன்றைய மாதப் பெயர்கள் நக்ஷத்ர பெயர்களின் திரிந்த வடிவமே ஆகும்! 
சித்திரை நக்ஷத்ரத்தில் பௌர்ணமி வரும் மாதம் சித்திரை... தெலுங்கில் சைத்ரம்! 
விசாகத்தில் பௌர்ணமி வருவதால் அது விசாகி - வைசாகி- வைகாசி! வைகாசி விசாகம் பண்டிகை நாளல்லவா?! 
அனுஷத்தில் வருவதால் ஆனி ஆனது! 
பூராடம் என்பது பூர்வ ஆஷாடம் அதுவே ஆஷாடம் - ஆடி என்றானது! 
திருவோணத்தை ஸ்ரவணம் என்பர்... ஸ்ராவணி - ஆவணி ஆயிற்று! 
பூரட்டாதி நக்ஷத்ரப் பெயரே  புரட்டாசி மாதப் பெயரானது! 
அஸ்வினி என்பது ஆஸ்விஜமாகி ஐப்பசி ஆனது! 
கார்த்திகை சொல்லவே வேண்டாம்! 
மார்கழி என்பது மார்கசீர்ஷம் அதாவது ம்ருகசீர்ஷ நக்ஷரத்தில் பௌர்ணமி வருவதால் வந்த பெயர்!
பூச நக்ஷத்ரத்தை தைஷ்யம் என்பர் ... அது தை ஆனது!
மகம் - மாக - மாசி ஆனது!
உத்தர பல்குனி நக்ஷத்ரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி - பங்குனி ஆனது!
இந்த நக்ஷத்ர மற்றும் மாதப் பெயர்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ளவை ஆகும்! 
இவ்வழக்கு சங்ககாலத்திலிருந்தே உள்ளதென்பதற்கு ஆதாரமாக தை என்ற மாதத்தின் பெயர் பலமுறை சங்க இலக்கியத்தில் வந்துள்ளது! ரோஹிணி என்ற நக்ஷத்ரதப் பெயர் நெடுநல்வாடை என்ற சங்க இலக்கியத்தில் நேரடியாகவே பயன்படுத்தப் பட்டுள்ளது!











Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்