சங்கத்தமிழில் சிபிச்சக்ரவர்த்தி - 42

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 42

சோழ மன்னர்கள் யாருடைய மரபினர்?




புறநானூறு பாடல் எண் 43 வரிகள் 7-10

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!

இப்பாடலில் புலவர் சோழ மன்னன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் என்று கூறியுள்ளார். நற்றிணை - 16, அகநானூறு - 36 ஆகிய பாடல்கள் சோழர்களைச் செம்பியன் என்கின்றன. சிபி என்பதே செம்பியன் என்று திரிந்தது.
இப்பாடல் சிபிச் சக்ரவர்த்தி புறாவைக் காப்பாற்ற தன் சதையைத் தந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.

உண்மைக் கதை- (சிபிச் சக்ரவர்த்தியின் ஈகை குணத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது.. ஆகவே அவனைச் சோதிக்க இந்திரன் புறாவாகவும், எமதர்ம ராஜன் கழுகாவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தவே சிபியுடம் அடைக்கலம் அடைந்தது புறா, புறாவைக் காப்பாற்ற புறாவின் எடைக்கு நிகரான  தன் சதையை தந்தான் சிபி. தராசில் தன் சதையை எவ்வளவு வெட்டி வைத்தும் புறாவின் எடைக்கு நிகரான சதையைத் தர முடியாமல் தன்னையே, தன் முழு உடலையும் தந்தார் சிபி. சிபியை மெச்சி காட்சி தந்து அருளினர் தேவர்கள்).

சோழர்களின் பழைய தலைநகரான பழையாறை அடுத்துள்ள
நந்திபுரம் பெருமாள் கோவில் இந்த வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

சிபிச் சக்ரவர்த்தியின் வரலாறு புத்த ஜாதகக் கதைகள், மஹாபாரதம் ஆகியவற்றிலும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிபிபுரம் சிபிச் சக்ரவர்த்தி ஆண்ட இடம் என்று சில அறிஞர்கள் கூறுவர். இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல இந்தோனேஷிய Borobudur கோவிலிலும் சிபிச் சக்ரவர்த்தியின் பெருமை மிக்க வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது.



ஒரு மன்னன் எத்தகைய ஈகை குணத்துடன் இருக்க வேண்டும் என்று சனாதனதர்மம் காட்டும் வழியில் சோழ அரசின் முன்னோனான சிபிச் சக்ரவர்த்தி வாழ்ந்து காட்டியது தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

Comments